Wednesday, August 25, 2010

நக்சல்பரி அரசியல்: டைஃபி கண்ணனுடன் ஒரு விவாதம்!

///////காலத்தின் தேவை கருதி நக்சலிசம் முதல் மாவோயிசம் வரை என்ற நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது./////

அப்படியா. விவாதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இப்புத்தக வெளியீடு குறித்து உள்ளபடியே மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆமா.... அது என்ன காலத்தின் தேவை கருதி.... அப்படிப்பட்ட தேவை எங்கிருந்து உருவாகியது? அத்தகைய தேவையை எது உருவாக்கியது? இதனை நாம் முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது.


முப்பதாண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிவந்த ஆட்சியதிகாரம் கையைவிட்டு நழுவிக்கொண்டிருக்கும் இந்நிலைதான் அத்தகையை காலத்தின் தேவையை நம்ம காம்ரேடுகளுக்கு உணர்த்தியிருக்கும் போலும்!


முதலாளித்துவம் உச்சிமுகர்ந்து கொண்டாடிய மறைந்த மார்க்சிஸ்டு தலைவர் ஜோதிபாசு பின்வருமாறு கூறுகிறார். “நக்சலிசத்தை வீழ்த்து- வதற்கான நடவடிக்கைகளில் முதன்மையான நடவடிக்கையாக தாம் மேற்கொண்டதுதான் மேற்குவங்கத்தில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீரமைப்பு சட்டம்.” ஆக இதிலிருந்தே தெரியும், மேற்குவங்க உழைக்கும் மக்களுக்கு பெயரளவுக்கேனும் வழங்கப்பட்ட அந்த நிலப்பங்கீட்டிற்கு காரணம் நக்சலிசம் என்பது.


நக்சலிசத்தை வீழ்த்தும்பொருட்டு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்களை மொத்தமாகப் பிடுங்கி இப்போது பன்னாட்டு பகாசூர முதலாளிகளுக்குச் சொந்தமாக்குகிறீர்களே, இது யாரை வீழ்த்துவதற்கு? இக்கேள்விக்கான பதிலைச் சொல்லுவதற்குள் ‘காம்ரேட்’ ஜோதிபாசு செத்துவிட்டதால், தோழர் கண்ணன் குறிப்பிட்டுள்ள இந்த ‘காலத்தின் தேவை கருதிய விவாத்தத்தில்’ நமது மதிப்பிற்குரிய தோழர்கள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.



////கம்யூனிஸ்ட் விவாதத்திலும் இயக்கம் தத்துவார்ந்த விவாதத்திலும், நடைமுறை விவாதத்திலும் நீண்ட காலத்தினை செலவிட்டு இருக்கிறது.////////


இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா, தோழர் கண்ணன். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் ஏனைய மத்திய, மாநில கட்சிகளுக்கும் உங்களுக்கும் நடக்கும் லாவணிக்கச்சேரியைத்தான் விவாதம் என்று புரிந்து கொண்டுவிட்டீர்களா?!


எந்த விவாதம்? யாருடன் எங்கு நடத்தப்பட்ட விவாதம்? என்பதை முடிந்தால் கொஞ்சம் சுட்டிக்காட்டுங்கள். அல்லது இதன் தொடர்ச்சியாக இதுகுறித்து விவாதிக்க முடிந்தால் முயன்று பாருங்கள், விவாதிப்போம்.



/////நந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு,...//////


மேற்குவங்க மாநில மார்க்சிஸ்டு அரசின் முதலாளித்துவ சேவையையும் பாட்டாளிவர்க்க துரோகத்தையும் “சலசலப்பு” என்ற இந்த ஒற்றை வார்த்தைக்குள் கமுக்கமாக முடக்கிவிட நினைக்கிறீர்கள். சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் லால்காரிலும் உங்கள் கட்சியின் குண்டர்படையான ‘ஹிம்மத் வாஹினி’ யாலும், உமது அரசின் பயங்கரவாத போலீசு படையாலும் கொண்று வீசப்பட்ட அப்பாவி மக்களின் போராட்டம் உங்களுக்கு சிறு சலசலப்பாகத் தெரிகிறது, போலும்!




நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள ‘காலத்தின் தேவையை’ உங்கள் கட்சிக்கு உணர்த்தியதே இந்த சிங்கூர், நந்திகிராம், லால்கார் மக்களின் சிறு ‘சலசலப்பு’தான் என்பதையாவது உணருங்கள், தோழரே!



//////மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளது.///////


உள்ளபடியே இந்தப் பெருந்தன்மை வேறு யாருக்கும் வராதுதான். நாடாளுமன்றத் தேர்தலின் தோல்வியை ஒப்புக்கொண்டது கிடக்கட்டும், தோழா; நந்திகிராமத்தில் அப்பாவி விவசாயிகளின் மீது கொலை- வெறியாட்டம் போட்டதற்காக பகிரங்கமாக பொறுப்பேற்று மன்னிப்பு கோரினாரே உங்கள் கட்சியின் மேற்குவங்க முதல்வர் புத்ததேவு, இது எத்தனை பெரிய பெருந்தன்மை!

* * * * *

தோழர் கண்ணன் அவர்களுக்கு,


ஒருவேளை இது ஒரு விவாதமாகத் தொடரும் என்கிற நம்பிக்கையில் நான் துவக்கத்திலேயே சிலவற்றைத் தெளிவுபடுத்திவிடுவது முறையாக இருக்கும் என்று கருதுகிறேன்.


மாவோயிஸ்டுகளின் நிலைப்பாட்டை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. மாவோயிஸ்டுகள் மீது செயல்தந்திர ரீதியிலான பல்வேறு விமர்சனங்கள் எனக்கும் உள்ளது. குறிப்பாக மாவோயிஸ்டுகள் - மம்தா இடையே உருவாகியிருக்கும் (நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கும் அளவுக்குத் தாழ்ந்ததாக இல்லையென்றாலும்...) கூட்டு என்பது ஏற்புடையதாக இல்லை. இங்கே நான் மாவோயிஸ்டுகளின் தரப்பில் விவாதிக்க வரவில்லை.


நக்சலிசம் என்பதையும் நக்சல்பாரிப் புரட்சி என்பதையும் ஏளனமாகவும் அவதூறாகவும் சித்தரிப்பதை நான் எதிர்த்து கருத்து பதிவேன். நான் நக்சல்பரி அரசியலைத்தான் இந்தியாவுக்கான புரட்சிகர பாதை என்று பல்வேறு அனுபவத்தினூடாக புரிந்துகொண்டிருக்கிறேன். சி.பி.எம். கட்சிக்கும் கம்யூனிசக் கருத்துக்களுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பதை நீண்ட, நெடிய அனுபவத்தினூடாகப் புரிந்துகொண்டிருக்கிறேன். இதுகுறித்து ஏராளமான சி.பி.எம். தோழர்களுடன் விவாதித்திருக்கிறேன். நீங்கள் விரும்பினால் உங்களுடனும் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன்.


வீரத்தெலுங்கானா முதல் நக்சல்பரி புரட்சி வரை இந்தியாவுக்கான புரட்சிகர அரசியல் நடமுறையை உணர்ந்துகொள்வதற்கான உறுதியான தடங்கள் பல இருக்கிறது. தெலுங்கானா, நக்சல்பரியின் தோழர்களைத்தவிர உமது கட்சியின் தலைமைக்கும் அத்தகைய உன்னதமான தடங்களுக்கும் சம்பந்தமில்லை. அதேவேளையில் வீரத்தெலுங்கானா போராட்டத்தில் களத்தில் ஆயுதப்போராட்ட முனையில் நின்றுகொண்டிருந்த இலட்சக்கணக்கான கீழ்மட்டத் தோழர்களின் தியாகத்தைப் புறக்கனித்து வெளிப்படையாக துரோகமிழைத்தது, அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிசக் கட்சியாக இருந்த இந்திக கம்யூனிசக் கட்சியின் தலைமை. எஸ்.ஏ.டாங்கே உள்ளிட்ட தலைவர்களின் வெளிப்படையான துரோகம் பல முனைகளில் அம்பலமாகியது.


அதேபோல, மேற்குவங்க மார்க்சிஸ்டு கட்சியின் டார்ஜிலிங் மாவட்டத்திற்கு உட்பட்ட சிலிகுரி வட்டக் கமிட்டியின் முடிவின் படி நந்திகிராம போராட்டம் துவக்கப்பட்டது. அப்போராட்டத்தில் அன்றைய மார்க்சிஸ்டு கட்சியின் சிலிகுரி வட்ட கட்சிக் கமிட்டியும், விவசாயிகள் சங்கமும் அன்றைய நிலபிரபுத்துவ கொடுங்கோலர்களான ஜோத்திதார்களுக்கு எதிராகக் களத்தில் நின்றனர்.


இது கட்சியின் தலைமைக்குத் தெரியாமல் ஒரே இரவில் திட்டமிட்டுத் துவக்கப்பட்ட போராட்டம் இல்லை. பல்வேறு அடக்குமுறையினை ஏவிவிட்ட நிலபிரபுத்துவத்தின் கொடுங்கோன்மைக்கு சில ஏழை விவசாயிகள் பலியிடப்பட்டதன் தொடர்ச்சியாகவே, இப்போராட்டம் துவக்கப்பட்டது. ஆனால், போராட்டம் துவங்கிய அவ்வேளையில் ஜோதிபாசு உள்ளிட்ட நால்வர் மந்திரிகளாக அங்கம் வகித்த கூட்டணி ஆட்சி மேற்குவங்கத்தில் இருந்தது.


1967-ல் நடைபெற்ற நக்சல்பரி எழுச்சியை ஜோதிபாசு தன் கையில் இருந்த போலீசு துறையைக் கொண்டு கொடூரமான ஒடுக்குமுறையை, களத்தில் போராடிக்கொண்டிருந்த தமது கட்சியின் சொந்த அணிகளின் மீது ஏவினார். கட்சியின் தலைமை சொந்த கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களை, போராளிகளைச் சுட்டுக் கொல்ல முடியுமா? அத்தகைய துரோகத்தனத்தில் இருந்த கட்சியிலா நாம் இத்தனையாண்டுகாலம் இருந்தோம்? என்கிற கேள்விகள், அக்கட்சியின் அணிகளின் மத்தியில் இந்தியாவெங்கும் எதிரொலித்தது. 9 போராளித்தோழர்கள் அன்றைய தினம் ஜோதிபாசுவால் கொன்று வீசப்பட்டனர். ஆனால், நந்திகிராமப் படுகொலைகளுக்கு புத்ததேவு பொறுப்பேற்றதைப் போல நக்சல்பரிப் படுகொலைகளுக்கு ஜோதிபாசு பொறுப்பேற்கவில்லை.


சரியாகச் சொன்னால், நக்சல்பரியின் நிலப்பிரபுக்களுக்கு ஆதரவாக சொந்த கட்சியின் ஊழியர்களையே கொன்றொழித்த தலைமை, இங்கே தமிழகத்தில் அப்போது கீழ்வெண்மணியில் நிலப்பிரபுத்துவத்தை எதிர்ப்பதாக நாடகம் நடத்திக்கொண்டிருந்தது. வெண்மணியின் நிலப்பிரபுவான கோபால- கிருஷ்ண நாயுடு-வை எதிர்த்து இங்கே இயக்கம், அங்கே நக்சல்பரியின் கோபால கிருஷ்ணநாயுடுக்களான ஜோத்திதார்களை எதிர்த்து இயக்கம் நடத்திய தோழர்களைப் படுகொலை செய்வது, இத்தகைய துரோகத்தில் திளைத்ததுதான் மார்க்சிஸ்டு கட்சியின் தலைமைகள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


மேற்குவங்கத்தைத் தவிர ஏனைய மாநிலங்களில் இதே மார்க்சிஸ்டு கட்சி உலகமயமாக்கலை எதிர்ப்பதாகவும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை எதிர்ப்பதாகவும் நாடகங்கள் பல நடத்திவிட்டு, மேற்குவங்கத்தில் உலகமயமாக்கலையும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தையும் துப்பாக்கிமுனையில் தினிக்கிறது. இதுபோன்ற இடத்திற்கேற்ப வேடங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை தமது பிழைப்புவாத அரசியலின் இயல்பிலேயே வந்ததுதான்.


தோழர் கண்ணன் இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த நக்சல்பரி போராட்டம் குறித்த புரிதல் இப்போதைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிற கருத்து அடிப்படையிலேயே தவறானது. நக்சல்பரி அரசியல் குறித்த அரிச்சுவடியே அந்த புரட்சிகர போராட்டமும் சி.பி.எம். தலைமையின் நினைத்துப் பார்க்கமுடியாத பச்சைத் துரோகமும்தான்.


சி.பி.எம். கட்சியின் போலிக்கம்யூனிச அரசியலைப் புறக்கனித்துவிட்டு நக்சல்பரி அரசியலை என்போன்றவர்கள் ஏற்றுக்கொள்வதற்கும் இத்தகைய புரிதலே வழிவகுத்தது. எந்தவிதமான தனிப்பட்ட நோக்கங்களும் அற்று முழுமையான சமூகமாற்றத்தினை விரும்பி கட்சியில் செயல்பட்டு வருகின்ற எவரும், அதே கொள்கையுடன் நீடித்திருப்- பார்களேயானால் மார்க்சிஸ்டு கட்சியில் அவர்கள் தொடர்ந்து தம்மைத் தக்கவைத்துக்- கொள்ள வாய்ப்பே கிடையாது.


தோழர் கண்ணனைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் நன்கு அறிவேன். அவர் எனது மேற்கண்ட கருத்துக்களை தவறாமல் பதிப்பித்து விவாதத்தை தொடருவார் என்கிற நம்பிக்கையிலேயே இத்தனை நெடிய பின்னூட்டங்களை இங்கு (அவரது பதிவின் பின்னூட்டப்பகுதியில்) பதிந்திருக்கிறேன்.
 
 
தோழமையுடன்,
து.சுரேஷ்.

Tuesday, August 24, 2010

மே.வங்கம்: முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற சி.பி.எம்-ன் வாதம் உண்மையா?

மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டைஃபி-யின் மாநிலச் செயலாளர் தோழர் கண்ணன் அவர்களும், அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் தோழர் இரமேஷ்பாபு அவர்களும் தொடர்ந்து தத்தமது வளைதளங்களில் நந்திகிராம் போராட்டங்களைப் பற்றி உண்மைக்குப் புறம்பாகவும் அவதூறாகவும் பல கருத்துக்களை எழுதிவருகின்றனர். அவர்களைச் சொல்லி பிழையில்லை அவர்கள் சார்ந்திருக்கின்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழுவும், அகில இந்திய பொதுச்செயலாளரும் பேசிவரும் அவதூறுகளைத்தான் இவர்கள் இங்கே ரிப்பீட் செய்துவருகின்றனர்.

எனவே இவர்களது கூற்றுக்களை முறியடிக்கும் வகையிலும், இதுகுறித்து அவர்களுடன் தொடர்ந்து விவாதிக முடியும் என்கிற எதிர்பார்ப்பிலும் சில பதிவுகளை இங்கு வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். அதன்படி எமது அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் தூத்துக்குடி - விருதுநகர் மாவட்ட கமிட்டிகள் இணைந்து வெளியிட்ட “நந்திகிராம்: சி.பி.எம். கட்சியின் கொலைவெறி!” என்ற சிறு வெளியீட்டிலிருந்து கீழ்கண்ட பதிவை இங்குப் பதிகிறேன். நன்றி!

தோழமையுடன்,
து.சுரேஷ்

======================================================================================

முதலாளிகள் தொழில் தொடங்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்ற சி.பி.எம்-ன் வாதம் உண்மையா?

டந்த பத்து ஆண்டுகளில் அந்நிய மூலதனம் இந்தியாவில் பெருமளவு பெருகியிருக்கிறது. தொழில்கள் துவங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் வேலைவாய்ப்பு முன்னர் இருந்ததைக் காட்டிலும் குறைந்திருக்கிறது என்றுதான் மத்திய அரசின் புள்ளி விவரங்களே கூறுகின்றன.

உற்பத்தியை மேலும் மேலும் நவீனமயமாக்குவதன் மூலம் வேலை வாய்ப்பைக் குறைப்பது, இருக்கின்ற தொழிலாளிகளின் வேலை நேரத்தையும் வேலைச்சுமையையும் அதிகரிப்பது என்பதுதான் முதலாளித்துவத்தின் பிறவிக்குணம். மார்க்ஸ் ஆணித்தரமாக நிரூபித்த இந்த விசயத்தை இதுநாள்வரை ஏற்காதவர்கள் கூட இன்று கண்முன்னால் தெரியும் உண்மைகளைப் பார்த்தபின் ஏற்றுக்கொள்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் என்ற சொல்லை மனித குலத்துக்கு அறிமுகப்படுத்தியதே முதலாளித்துவம்தான். ஆனால் ‘மார்க்சிஸ்டுகளோ’ முதலாளித்துவம் வேலைவாய்ப்பைப் பெருக்கும் என்கிறார்கள்.

மேற்கு வங்கத்தின் புள்ளிவிவரங்களையே பார்ப்போம். 90களின் நடுப்பகுதியில் தொடங்கி தனியார் முதலாளிகளைக் கவர்ந்திழுத்து மார்க்சிஸ்டுகள் மேற்கு வங்கத்துக்குப் புதிதாகக் கொண்டு வந்துள்ள தொழில் மூலதனம் 28,000 கோடி. இதனால் உருவாகியுள்ள வேலை வாய்ப்புகளோ 60,000. அதாவது ஒரு கோடி ரூபாய் மூலதனத்துக்கு இரண்டு வேலை. மேற்குவங்க அரசின் கணக்குப்படி தற்போது மேற்குவங்கத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை 70 இலட்சம் பேர். மேற்கூறிய கணக்கின்படி இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டுமென்றால் 35 இலட்சம் கோடி ரூபாய் மூலதனம் போடவேண்டும்.

இது சாத்தியம் என்பதை ஒரு பைத்தியக்காரன் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். மேலும் வெறும் 1500 கோடி ரூபாய் மூலதனம் போடும் டாடாவுக்கு சிங்கூரில் வழங்கியுள்ள சலுகைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள். 35 இலட்சம் கோடி மூலதனம் வேண்டுமானால் மேற்கு வங்கம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலவசமாகப் பட்டா போட்டுக் கொடுத்தால் கூட நடக்காது.

இது ஒருபுறமிருக்க, 1985 முதல் 2003 வரை ஆலைகள் மூடப்பட்டதன் காரணமாக வேலையிழந்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 12 இலட்சம். 50,000த்துக்கும் அதிகமான சிறு, நடுத்தர தொழில்கள் மூடப்பட்டிருக்கின்றன. புதிதாகத் தொடங்குவது இருக்கட்டும். மூடியவற்றைத் திறப்பதற்கு இவர்கள் என்ன செய்தார்கள்? இந்தத் தொழிலாளர்களுக்கு யார் வேலை வாய்ப்புக் கொடுப்பார்கள்?

முதலாளித்துவத் தொழில்மயம் 10 வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் 100 வேலைகளைப் பறிக்கும். ஏனென்றால் முதலாளிகளின் நோக்கம் இலாபம். மேலும் இலாபம்.

தொழில்மயம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தின் கீழ், உழைக்கும் வர்க்கத்தின் நலனுக்காக செய்யப்படும்போது மட்டும்தான் அதாவது, தனியார் இலாபம் என்ற நோக்கத்தை ஒழித்துவிட்டு சமூக முன்னேற்றம், நல்வாழ்வு என்பதை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் போது மட்டும்தான் அது வேலை வாய்ப்புகளை உண்மையிலேயே வழங்க முடியும்.

“உங்கள் அரசாட்சி என்பது விவசாயிகள் நலனுக்கானது என்று நீங்கள் கருதினால் புத்ததேவ் பட்டாச்சார்யா மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” “சோஷலிசம் என்பது பயங்கரவாதம் அல்ல. அது மனிதாபிமானம். துப்பாக்கியால் நடத்தப்படும் கொடுங்கோல் ஆட்சி என்பது நிச்சயம் இடதுசாரி ஆட்சி அல்ல.”

“ஆனால் மேற்கு வங்கத்திலோ முதலாளித்துவம் மகிழ்ச்சியாக இருக்கிறது. விவசாயிகள் வறுமைக்கும் பறிமுதலுக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.”


குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள இக்கருத்துக்கள், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், இ.எம்.எஸ்.ஸின் தலைமையில் கேரளத்தில் முதன்முதலில் அமைந்த இடதுசாரி அரசில் சட்ட அமைச்சராக பணியாற்றியவருமான வி.ஆர்.கிருஷ்ணய்யர் மார்க்சிஸ்டு கட்சி பொதுச்செயலர் பிரகாஷ்காரத்துக்கு மார்ச் 15-2007 அன்று எழுதிய கடிதத்திலிருந்து.


“பெரிய முதலாளித்துவக் குழுமங்களுக்குக் சாதகமாக சாதாரண விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொடுக்கும் வேலையை இந்த அரசு செய்யுமானால், இந்தக் கட்சி தன்னை மார்க்சிஸ்டு கட்சி என்ற பெயரால் அழைத்துக் கொள்ளவே தகுதியற்றது. இது மார்க்சுக்கு செய்யும் துரோகம்.”

-வி.ஆர்.கிருஷ்ணய்யர் (மெயின் ஸ்ட்ரீம் வார இதழ், டிச.8-14’2006)
=====================================================================================

மேற்கண்ட பதிவுடன் தொடர்புடைய பிற கட்டுரைகள்:

1.  லால்கார் : சி.பி.எம். - காங்கிரசு அரசுகளின் பயங்கரவாதம்! - வினவு.
2. போலிகம்யூனிச ஆட்சிக்கு எதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி! - வினவு.
3. திருட்டுக் கும்பலின் கையில் செங்கொடி எதற்கு? சி.பி.எம்-இன் நில அபகரிப்பு! - வினவு.
4. இந்தியாவின் இதயத்தின் மீதான போர்! - அருந்ததிராய்.